Home இலக்கியங்கள்கட்டுரைகள் பெர்லிஸுக்குப் பயணம்-6 (கங்கார் ஸ்ரீ ஆறுமுக சாமி)

பெர்லிஸுக்குப் பயணம்-6 (கங்கார் ஸ்ரீ ஆறுமுக சாமி)

by admin
0 comment

கங்கார் ஸ்ரீ ஆறுமுக சாமி ஆலயத்தைப் பற்றிய அறிமுகத்தை முந்தைய பதிவில் வழங்கியிருந்தேன். இந்தக் கோயில் எப்படி படிப்படியாக மானில அரசின் உதவியுடனும் பொது மக்களின் பெரும் உழைப்பினாலும் வளர்ந்து இன்று பெர்லிஸ் மானிலத்தில் மிக முக்கிய ஹிந்து ஆலயமாகத் திகழ்கின்றது எனபது போன்ற தகவல்களை இன்றைய பதிவில் பகிர்ந்து கொள்கின்றேன்.

ஸ்ரீ சுப்ரமணிய சுவாமி தேவஸ்தானம் என பதிவு செய்யப்பட்டு பணிகள் தொடங்கப்பட்ட போது கோயிலை அமைப்பதற்காக திரு.எஸ்.பி.எல்.பி.பழனியப்பா செட்டியார் அவர்கள் தனது நிலம் ஒன்றினை அன்பளிப்பாக வழங்க முன்வந்தார்கள். அந்த இடம் கோயில் அமைப்பதற்கு ஆகம முறைப்படி சரியான இடமாக அமையாமல் போனதால் வேறு வகையில் உதவும் பொருட்டு இந்த ஆலயத்தில் எழுந்தருளியுள்ள மூலமூர்த்தி ஸ்ரீ ஆறுமுக சுவாமி, வள்ளி, தேவயானை, மயில் வாகனம், பலி பீடம் ஆகியவற்றை இந்தியாவிலிருந்து கொண்டு வருவதற்கான அனைத்து செலவுகளையும் தனது பொறுப்பில் ஏற்றுக் கொண்டார். அத்துடன் தனது மூதாதையர் பர்மாவில் வழிபாட்டுக்கு வைத்திருந்த தேக்கு மரத்தில் சட்டமிடப்பட்ட தண்டாயுதபாணி படம் ஒன்றினையும் இவ்வாலயத்தில் வைப்பதற்கு அன்பளிப்பாக வழங்கினார்.


தற்போது ஆலயம் எழுப்பப்பட்டுள்ள இடம் பெர்லிஸ் மானில அரசுக்கு சொந்தமான இடத்தில் அமைந்திருந்ததால் இந்த இடத்தை பெருவதற்காக மானிலத்தின் முதலமைச்சரை இந்த ஆலயப் பணிக் குழுவினர் அணுகினர். மத்திய அரசிடமிருந்து $25,000.00 (மலேசிய வெள்ளி) நன்கொடையும் இக்கோயிலை அமைப்பதற்காகக் கிடைத்தது. இதற்கு மானில முதலமைச்சர் டத்தோ ஷேக் அஹமத் மிகவும் உறுதுணையாக இருந்திருக்கின்றார். இடம் கிடைத்ததும் சேற்றுப் பகுதியாக இருந்த அவ்விடத்தை மணலால் கொட்டி நிரப்பி அதனை சரியான நிலைக்குத் தாயாரித்திருக்கின்றனர் கங்காரிலும் ஆராவ் பகுதியிலும் வாழ்ந்த ஹிந்து மக்கள்.

இக்கோயிலின் அடிக்கல் நாட்டு விழா 11.7.1968ம் ஆண்டு துன் வீ.தீ.சம்பந்தன் அவர்களால் நிகழ்த்தப்பட்டது. இக்கோயில் கட்டுமாணப்பணிகள் தொடங்கப்பட்டதும் பொருளாதாரப் பிரச்சனைகள் எழுந்த போது மானில முதலமைச்சர் அவர்கள் மேலும் $15,000 (மலேசிய வெள்ளி) மானில பொறுப்பிலிருந்து ஏற்பாடு செய்து உதவியிருக்கின்றார். அத்துடன் நாடு முழுவதுமிருந்து திரட்டப்பட்ட நன்கொடைகளிலிருந்து மேலும் கிட்டிய தொகையில் கோயிலின் முழு கட்டுமானப்பணியும் நிறைவு பெற்றிருக்கின்றது.

கட்டுமாணப்பணிகள் முடிவுற்று 14.6.1970 ஞாயிற்றுக்கிழமை ஸ்ரீ ஆறுமுகசாமி ஆலயத்தின் முதல் கும்பாபிஷேகம் சிறப்புற நடைபெற்றது. இவ்வாலயத்தை அதிகாரப்பூர்வமாக பெர்லிஸ் மானில முதலமைச்சர் டத்தோ ஷேக் அஹமது அவர்கள் காலை மணி 11.15க்கு திறந்து வைத்து சிறப்பு செய்திருக்கின்றார்.

28.1.1972 அன்று இவ்வாலயத்தின் முதல் பொதுக் கூட்டம் நடைபெற்று அதில் மறைந்த திரு.வீ.கோவிந்தசாமி நாயுடு அவர்கள் முதல் ஆலயத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கின்றார். இவர் தலைமையிலான குழு முக்கியப் பணியாக ஆலயத்தைச் சுற்றிலும் சுவர் எழுப்பும் திட்டத்தை திறம்பட செய்து முடித்துள்ளனர். அத்துடன் ஆலயத்தின் வைகாசி விசாக தேர் திருவிழாவிற்காக ஸ்ரீ ஆறுமுகசாமியின் பஞ்சலோக சிலை ஒன்றினை வாங்க முடிவு செய்து அதனை இந்தியாவிலிருந்து தருவித்தனர். அதனைத் தொடர்ந்து ஆலயத்தில் நவக்கிரக சன்னிதியும் அமைக்கப்பட்டது.

இவ்வாலயத்தில் கிருபானந்த வாரியார் சுவாமிகள் உரையாற்றிக் கொண்டிருக்கின்றார்

இக்கோயிலுக்கு தவத்திரு கிருபானந்த வாரியார் சுவாமிகளும் வந்து சிறப்பித்திருக்கின்றார் என்பதுவும் ஒரு பெருமை தரும் செய்தி. 15.12.1981 அன்று முதன் முதலில் தவத்திரு கிருபானந்த வாரியார் சுவாமிகளின் சொற்பொழிவு இவ்வாலயத்தில் நிகழ்ந்துள்ளது. 1983ம் ஆண்டு திரு.வி. கோவிந்த சாமியின் மறைவுக்குப் பின்னர் மறைந்த திரு.அழகுமலை அவர்கள் ஆலய தலமை பொறுப்பை ஏற்றுக் கொண்டார். அதற்குப் பின்னர் 1987ம் ஆண்டு நடைபெற்ற ஆலயப் பொதுக்கூட்டத்தில் திரு.ராமையா நரசிம்மலு நாயுடு அவர்கள் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.

இவ்வாலயத்திற்கு மீண்டும் கிருபானந்த வாரியார் சுவாமிகள் 1982ம் ஆண்டு வருகை புரிந்து ஆன்மீகச் சொற்பொழிவாற்றியிருக்கின்றார்.

2002ம் ஆண்டு இக்கோயிலின் பெயர் ஸ்ரீ ஆறுமுகசாமி தேவஸ்தானம் என பெயர் மாற்றம் கண்டது. அதே ஆண்டு இக்கோயில் முழுதும் சீரமைக்கப்பட்டு 11.9.2002ம் அன்று மூன்றாவது கும்பாபிஷேகம் நிகழ்த்தப்பட்டது. இகோயில் சீரமைப்பு மற்றும் கும்பாபிஷேகத்துக்கு தேவைப்பட்ட $200,000.00 (மலேசிய வெள்ளி) பொது மக்கள் வழங்கிய நன்கொடையின் வழி சேகரிக்கப்பட்டது.

இக்கோயிலின் தேர் இலங்கையிலிருந்து (கொழும்பு) ஆகம முறைப்படி தயாரிக்கப்பட்டு இங்கு கொண்டு வரப்பட்டது. தேக்கு, மஹொகானி, சந்தன மரத்தினால் உருவாக்கப்பட்ட தேர் இது. இலங்கையிலிருந்து தயாரித்து கொண்டுவரப்பட்ட தேரின் தனித்தனி பாகங்களைத் திரு.ஜெயகாந்தன் என்பவர் ஆலயத்திலேயே இருந்து அவற்றை பொறுத்தி முழுமைபடுத்தி முடித்திருக்கின்றார். 31.5.2004 அன்று ஆலயத்தில் ஒரு பொன்னாலான வேல் மட்டும் வைத்து இத்தேரினை ஆலயத்ததைச் சுற்றி வலம் வரச் செய்திருக்கின்றனர். இதனைத் தொடர்ந்து 2.6.2004 அன்று ஆலயத்தில் மிகச் சிறப்பான முறையில் ஷண்முக அர்ச்சனை நிகழ்த்தப்பட்டுள்ளது.

ஆலயத் தேர்

அத்துடன் திருமதி.சுசீலா ராமையா என்பவர் இவ்வாலயத்தில் தற்போதுள்ள 250 கிலோ எடையுள்ள பஞ்சலோக ஸ்ரீ ஆறுமுகசாமி, வள்ளி தெய்வானை சிலைகளை நன்கொடையாக வழங்கியிருக்கின்றார். இச்சிலைகள் இலங்கையில் தயாரிக்கப்பட்டவை. இந்த சிலைகளே தற்சமயம் வைகாசி விசாக தேர் திருவிழாவில் ஊர்வலத்தில் பயன்படுத்தப்படுகின்றன. இந்த உற்சவ மூர்த்தி சிலைகளை வைத்து முதன் முதலாக 2.6.2004 அன்று முதல் முறையாக இத்தேர் கங்கார் நகரை வலம் வந்தது. பினாங்கு மானிலத்திலிருந்து ஏற்பாடு செய்து கொண்டுவரப்பட்ட இரண்டு காளைகள் இந்த தேரினை இழுத்துச் சென்றன. இத்திருவிழாவும் ஆலய பூஜை வைபவங்களும் ஆலய ஆகம் முறைப்படி செய்விக்கப்பட்டிருக்கின்றன.

வைகாசி விசாக விழாவோடு, கந்தர் சஷ்டி, திருக்கார்த்திகை ஆகிய விழாக்களும் இவ்வாலயத்தில் சிறப்பாக ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படுகின்றன.

மலேசியாவைப் பொறுத்தவரை பொதுவாகவே ஆலயத்திருப்பணிகளுக்கு ஆதரவு தர பொது மக்கள் என்றும் தயங்குவதில்லை. ஆலயங்களில் நடைபெறும் பல திருவிழாக்கள், கலாச்சாரப் போட்டிகள் போன்றவை மக்கள் தரும் நன்கொடைகள் சமூக ஆர்வலர்களின் உழைப்பு ஆகியவற்றால் நிகழ்த்தப்படுபவை. பெரும்பாலான ஆலயங்களில் ஆலயப் பொதுக் குழு, இளைஞர் குழு, மகளிர் குழு என தனித்தனி பிரிவுகளை அருகாமையில் உள்ள மக்களாகவே சேர்ந்து உருவாக்கி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள். அதில் குறிப்பாக ஆலயத் துப்புரவுப் பணி, திருவிழா ஏற்பாடுகள், கலாச்சார போட்டிகள், பொங்கள் திருவிழா ஏற்பாடுகள், ஆலய பஜனைக் குழுவினர் என அமைந்திருக்கும். மலேசிய ஹிந்து மக்களில் பலர் தங்கள் வார இறுதி நாட்களையையும் வெள்ளிக் கிழமையையும் இவ்வகை பணிகளுக்காக ஒதுக்குவதும் உண்டு. எனது அனுபவத்திலேயே இவ்வாறு பல நடவடிக்கைகளில் நானும் ஈடுபட்டிருக்கின்றேன். அவை அனைத்தைம் மனதை விட்டு அகலாத இனிய நிகழ்வுகள்.

ஆலயத்தில் திருவிளக்குப் பூஜை
கோயிலைச் சுற்றியுள்ள குன்றிலிருந்து பல குரங்குகள் இவ்வாலயத்தில் அங்கும் இங்கும் தாவி விளையாடிக் கொண்டிருக்கும் காட்சி..

இவ்வாலயத்தில் அமைந்துள்ள நவக்கிரகக் கோயில்

 
-முனைவர்.க.சுபாஷிணி

You may also like

Leave a Comment